#40நாள்இயேசு
நாள் 10
மத்தேயு 5:3-12
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 4 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். 5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். 6 நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். 7 இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். 8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். 9 சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். 10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 11 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். 12 சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்கப் போவதால் தான் பாக்கியவான்கள். இந்த எளிமை இயலாமையில் வந்ததல்ல. அறியாமையில் வந்ததல்ல. நான் யார், கர்த்தர் யார் என்ற புரிதலில் வந்தது. ஆவியில் ஏழ்மை என்பது ஆன்மீகப் பஞ்சம். ஆவியில் எளிமை என்பது ஆன்மீக முதிர்ச்சி. இயெசுவின் முன்மாதிரி தான் எளிமையை நமக்குக் கற்றுத் தருகின்றது. பெரும் ஆசனங்கள், வந்தனங்கள், ஆராதனை, அரச பதவி என்று எதையும் ஏற்காமல் அமைதியாக, அடக்கமாக இருந்த இயேசு தான் நம் முன்மாதிரி. வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த எளிமை தான் பரலோக ராஜ்யம் என்ற பெரும் பாக்கியத்தை நமக்குத் தரப் போகின்றது.
ஆறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் தான் துயரப்படுகிறவர்களைப் பாக்கியவான்கள் என்று சொல்ல முடியும். சகல ஆறுதல்களின் கர்த்தர் துயரத்தின் தன்மைக்கு ஏற்ப ஆறுதல் தருகிறார். அந்த ஆறுதல், பிறருக்கு ஆறுதல் தரவே பயன்படப் போகிறது. பிறர் துயரைத் தம் துயராக நினைப்பவர்களே இந்தப் பாக்கியவான்கள்.
பூமியை சுதந்தரிப்பதற்காக அல்ல, சாந்த குணத்துடன் இருபது தங்கள் குணமாக இருப்பவர்கள் பூமியை சுதந்தரிக்கும் பாக்கியவான்களாவார்கள். பூமியை ஆட்சி செய்ய சாந்த குணமுள்ளவர்களாக நடித்தால் அதிக நேரம் அது நீடிக்காது.
திருப்தி நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்களுக்கு திரும்பத் திரும்ப கிடைத்துக் கொண்டிருக்கும். அந்த பசி, தாகம், திருப்தி என்னும் தொடர் நிகழ்வுதான் அவர்களை பாக்கியவான்களாக்குகின்றது. ஒரே நாளின் அனுபவம் அல்ல இது. ஒவ்வொரு நேரத்திற்குமான நிறைவு, வெறுமையாக்கப்படுதல் என்று ஒன்று மாற்றி ஒன்றாக நிகழும் தொடர் பாக்கியம்.
இரக்கம் செய்து இரக்கம் பெறுபவர்களுக்கு அதன் மதிப்பு தெரியும். பாக்கியவான்களாக இருப்பார்கள். கர்த்தரிடம் இரக்கம் பெற்று மக்களுக்கு இரக்கம் காட்டுவது எத்தனை நிறைவான வாழ்க்கை. நம் இரக்கத்துக்கு தலை வீங்காமல். அவர் இரக்கத்தால் நன்றி பொங்க இரக்க உணர்வு வாழ்வை நிறைக்க, இந்த கொடூர உலகில் ஒரு பாலைவனச் சோலையாய், நமக்கு நாமே, பிறர்க்கும் நாமே இரக்கத்தை இறைத்துக் கொட்டலாம்.
தேவனை தரிசிப்பதால் தான் இருதய சுத்தம் பாக்கியமாகிறது. அவர் சாயல் தான் மனக்கண் மூலம் இதயத்தை நிறைக்கிறது. வெறும் இருதய சுத்தம் மேலும் பல அழுக்குகளை உள்ளே கொண்டுவரக் கூடும். நாம் சுத்தப்படுத்துவது இன்னும் அதிக அழுக்கான சுய பெருமையைக் கொண்டுவரலாம். சுத்திகரிக்கும் அவரே, காட்சியும் தருகிறார்.
தேவனுடைய புத்திரர் செய்யும் சமாதானம் வித்தியாசமானது. அது அமைதியை மட்டுமல்ல, புத்திக்கு எட்டாத அளவில் கர்த்தரிடமிருந்து வரும் சமாதானத்தை அறிமுகம் செய்வது. சொந்த முயற்சியிலோ, அனுபவத்திலோ செய்யப்படுவதில்லை. சமாதானப் பிரபுவின் சமாதானப் படைவீரர்களின் கருவிகளே அன்பு தான். வில் இல்லாத அம்பு.
நீதியின் மேல் பசி தாகம் கொண்டு, திருப்தியும் அடைபவர்கள் அதே நீதியின் காரணமாக துன்பப்படும்போது பரலோக ராஜ்யத்தின் நிரந்தரக் குடிமக்களாகிறார்கள். ஏன்? பரலோக ராஜ்யம் நமக்கு அடைக்கலம் தரும் ஒன்றல்ல, நம் தாய் நாடே அது தான். துன்புறுத்தி துரத்தும் அரசுகளும் அதிகாரங்களும் நிரந்தரமானவைகள் அல்லவே. ஒரே நிரந்தர குடியிருப்பு நம் பரலோகம் தான்.
பொய்யான குற்றச்சாட்டுகள், நிந்தனை, துன்பம், தீய வார்த்தைகள் இயேசுவுக்காக வாழ்வதால் நமக்குக் கிடைக்கும் என்றால் பாக்கியம் நமதே. நமக்கொரு விருந்து இருக்கிறது. பரலோகத்தில் இதற்கான பலன் பெரியதாக இருக்கும். நேரடியான துன்பம் இல்லையென்றாலும், அவ்வப்போது தேவராஜ்யத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதால் கிடைக்கும் கேலிப் பேச்சுக்கள், புறக்கணிப்புகள், தனிமை எல்லாவுமே நம் கணக்கில் இருக்கின்றன. சீக்கிரமாய் வரப் போகும் ராஜாதி ராஜா, நமக்கான பலன்களையும் உடன் கொண்டு வருகிறார்.0